சிதம்பரம்,மார்ச் 7: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சிதம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடை முன் ஞாயிற்றுக்கிழமை மறியல் செய்ய முயன்ற 93 பெண்கள் உள்ளிட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டப் பொருளர் எஸ்.கே.பி.அமீர்பாஷா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் வி.எம்.ஷேக்தாவூத், துணைச் செயலர்கள் எஸ்.ஜாகீர்உசேன், எஸ்.மன்சூர், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.அஷ்ரப்அலி, இ.மகபூப்உசேன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
பின்னர் அங்கிருந்து லால்கான்தெரு மதுபானக்கடை முன் மறியல் செய்யஊர்வலமாக சென்ற போது மேலவீதி அண்ணா சிலை அருகே நகர போலீஸôர் வழிமறித்து பெண்கள் 93 பேர் உள்ளிட்ட 250 பேரை கைது செய்தனர்.
கடந்த 2008-09 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.13500 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த நடப்பாண்டில் ரூ.15ஆயிரம் கோடியாக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில் கிடைக்கும் நிதியில் அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சி உள்ளிட்ட கவர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி மக்களை சீரழித்து வருகிறது. எனவே எதிர்கால தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டதாக எஸ்.கே.பி.அமீர்பாஷா தெரிவித்தார்.